Monday, November 30, 2009

கண்ணில்லாக் கண்ணாடி

என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்

நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்
ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின
கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன

இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்

கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின் பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று

பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது

நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்

Saturday, November 28, 2009

நினைவு வன்புணர்ச்சி

அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்

முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன

பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது

எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது

எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன

Wednesday, November 18, 2009

தானே தொலையும் நான்

தான் அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருந்தது
"நான்"

நாலு பேருக்குள்
கலையும்"நான்" யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை

என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்

நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது

அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ

தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது

திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது

சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது

தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது

மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
"நான்"அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
"நான்"

Tuesday, November 10, 2009

நானேயறியாமல்

நான் கழற்றிப் போட்ட
இன்றைக்கான முகமூடிகளால்
நிரம்பிக்கிடக்கிறது என் கட்டில்
சிலது இப்போதும் சிரிக்கின்றன
பலது அழுதே கொண்டே
நடுநிசியில் பெருக்கும்
கண்ணீர்க் கடலில் மூழ்கி
மூச்சடைத்துத் திணறி விழித்தால்
என்னுடையதாயிருந்தவை தாம்
வேறொருவரினது என்று
வாதம் புரிகின்றன
நானே அறியாது நிகழ்ந்த
பண்டமாற்றங்களிடையில்
மௌனமாகிக் கிடக்கின்றன
என்னுடையவை
நாளையாவது அணியலாமென்று
பத்திரப்படுத்துகிறேன்
நாளை போலிகளில்லாததாகட்டும்

Saturday, November 7, 2009

நித்திரை என்பதான பொய்

விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்

தேடிப் பறந்த மனதோ - தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது

நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்

தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்

இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் - ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்

Tuesday, October 27, 2009

என் ஒரு நாள்

ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
என் அறையின் குப்பைத் தொட்டி

நேற்றயதுகளில் புதைந்த
இன்றயதுகளுக்கான மனதைத்
தேடி தொலைந்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்

தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி

அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்

தொடரும் காதல்கள்

ஊசிக் குளிரில்
உறைந்து கிடக்கிறது
உயிர்
என் தெருவெங்கும் பூத்திருக்கும்
பனிப் பூக்களினடியில் கிடக்கிறது
நீ எங்கோ ஏகியதுக்கான
தடங்கள்
தொடரும் கோடைகளில்
கரையும் பனிகளில்
குளங்கள் கட்டி நிற்கிறது
காலம்

இறங்கித் தேடவும்
இடமும் தராமல்
கொட்டித் தீர்க்கிறது
தனிமை மழை

நான் பிறப்பதற்கு
முன்னோ கூடவோ
நீ பிறந்ததன் அடையாளங்கள்
அதிலே அழிகின்றன

எங்கோ நீ இருப்பாய்
என்பதான கனவில்
காதல் கொள்கிறது
என் கவிதை

அதன் வரிகளில் வழியும்
வலிகளில் மீண்டு - மீண்டும்
ஊசிக் குளிரில்
உறையத் தொடங்குகிறது
உயிர்

இன்னொரு கோடை
அதோ
வந்து கொண்டேயிருக்கிறது